''கருணா, பிள்ளையானை இரகசியமாக சந்திக்கலாம், ஒட்டுக்குகுழு பற்றி பேசக்கூடாது.." வெடித்தது சர்ச்சை


 

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது தற்போது வடக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் எப்பொழுது ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்துக்குள் காலடி
எடுத்துவைத்தாரோ, அந்த நொடியிலிருந்துதமிழரசு கட்சியின் கொள்கை  கோட்பாடு  அறம் அனைத்தையும் குழிதோண்டிபுதைத்துவிட்டார். எனவே பதில் தலைவர் பதவியிலிருந்தும் தமிழரசு கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் அவர் வெளியேறுவதே சாலச்சிறப்பாகும். அத்துடன் சி.வி.கே.சிவஞானம் பின்னால் இருந்து இயங்குபவர்களும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக்கட்சி பயணிக்க வேண்டும் என்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் நாளை கூட கிழக்கு மாகாணத்துக்கு வந்து கருணா அம்மானையும் பிள்ளையானின் பிரசாந்தனையும் சந்தித்து கூட ஒன்றுபடக்கூடும். ஆகவேஇனிவரும் காலங்களில் ஒட்டுக்குழு பற்றியகதை ,டக்ளஸ் கதை ,பிள்ளையான் கதைபற்றி சி.வி.கே.சிவஞானமோ அவருடன் இருக்கும் தரப்புகளோ பேசக் கூடாது என்றார்.

இதேவேளை உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சிலசபைகளில் ஆட்சியமைப்பதற்காக, தமிழ்த் தேசிய விரோதக்கட்சியான ஈழ மக்கள் ஜனநாய கக் கட்சியின் ஆதரவைக் கோரியதற்கும், அதுவிடயம் சார்ந்து குறித்த கட்சியின் செயலாளரானடக்ளஸ் தேவானந்தாவை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்ததற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் மீது அதியுச்ச கண்டனத்தையும், அதிருப்தியையும் பகிரங்கமாகப் பதிவு செய்வதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம் டக்ளஸ்  சிவஞானம் சந்திப்பை வன்மை யாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கொள்கை சார்ந்து எதனையும் பேசவில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  
அத்தோடு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவரை சிறீதர் தியேட்டருக்கு சென்று சந்தித்தது பற்றியும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் நாமாக சந்திப்பைக் கோரும் பட்சத்தில், நாம் தான் அவர்களது இடத்துக்குச் சென்று பேசவேண்டும் என்பது பதில் தலைவரின் நிலைப்பாடு. இதனையே அவர் கடந்த காலங்களிலும் பின்பற்றியிருக்கிறார். ஆகையினாலேயே அவர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது கட்சித் தலைமையகமான சிறீதர் தியேட்டருக்குச் சென்று சந்தித்தார் என்றார்.